Friday, November 14, 2008

Some one line lesson: The story of a fox

நரியின் கதை


ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்க்கு நோக்கி வேட்டைக்கு புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி 'நான் ரொம்ப பெரிய ஆளாக்கும். இவளவு பெரிய எனக்கு பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுபடியாகும்!' என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியபடுத்தியபடி தன் பசிக்கு குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியனால் நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.

' ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்து போய்விட்டோம்...' சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்து போன நமக்கு ஒரு ஆட்டுக்குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹும், பயனில்லை. மாலையில் மேற்க்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்கு பின்பாக விழுந்தது. அதனால், நரிக்கு தன் நிழலே தெரியவில்லை...

'ஆஹா ... நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய்விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, சீச்சீ... நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்த பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன் ஒரு சின்ன எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கை தொங்க விட்ட படி தள்ளாடி தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி.... சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கண்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதிக்கிவிட்டு அலைகின்றனர். முடிவில், ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர். இரண்டும் வேண்டாமே! பொன்மூட்டையில் 99 பொற்காசுகள் தான் இருக்கிறது, 100 ஆவது இல்லையே என வருந்தி காலத்தை வீணடிக்காமல், கிடைத்த 99 வைத்து சந்தோஷமாக இருக்கலாமே?